அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.

Tuesday, January 18, 2011

மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் நடந்த ஜும்ஆ தொழுகை!!!





டெல்லியில் காங்கிரஸ் அரசின் கரசேவையினால் இடிக்கப்பட்ட மஸ்ஜிதில் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஜும்ஆ தொழுகை நடந்தது.


டெல்லி இமாம் அஹ்மத் புகாரி ஜும்ஆ தொழுகைக்கு தலைமை தாங்கினார்.




டெல்லி நிஸாமுத்தினூக்கு அருகிலுள்ள ஜங்புராவில் பழமையான நூர் மஸ்ஜித் கடந்த புதன்கிழமை டெல்லி வளர்ச்சி ஆணைய அதிகாரிகளால் அநியாயமாக இடித்துத் தள்ளபட்டது.


மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ஜும்ஆ தொழுகை நடத்தப்படும் என முன்னரே டெல்லி இமாம் அஹ்மத் புகாரி அறிவித்திருந்தார். மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தொழுகைக்கு அனுமதிப்பதாகவும், மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்த டி.டி.ஏவிடமிருந்து வாங்கி மீண்டும் மஸ்ஜிதை புனர் நிர்மாணிக்க வக்ஃப் போர்டிடம் ஒப்படைக்கப்படும் எனவும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் டெல்லி இமாமை சந்தித்து உறுதியளித்திருந்தார்.


மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால்ரெட்டி ஆகியோருடன் ஆலோசனை நடத்தியபிறகு ஷீலா தீட்ஷித் இந்த உறுதியை அளித்தார்.


டெல்லியில் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் நிஸாமுத்தீன் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடைகள் மூடிக்கிடந்தன. போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னாலும் மக்கள் ஜும்ஆ தொழுகையை நடத்தினர். தொடர்ந்து ஊர்வலமாக மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்திற்கு சென்றனர். வழியில் போலீஸ் தடுத்தபொழுதிலும் அதனை மீறிய மக்கள் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் கூடினர். ஆனால், போலீசார் மஸ்ஜித் இடிக்கபட்ட இடத்திற்கு மக்களை அனுமதிக்கவில்லை. தொடர்ந்து டெல்லி இமாம் அவ்விடத்திற்கு வருகைதந்தார்.


மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தொழுகை நடத்தப் போவதாகவும், போலீசார் தடுக்கக்கூடாது எனவும் டெல்லி இமாம் கூறினார். தொடர்ந்து, போலீசார் தடைக் கட்டைகளை அப்புறப்படுத்தினர். இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் சிதிலங்கள் மீது ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஜும்ஆ தொழுகை நடந்தேறியது.


தொழுவதற்குத் தேவையான தொழுகை விரிப்புகளை அருகிலுள்ள வீடுகளிலிருந்து பெண்கள் கொண்டுவந்துக் கொடுத்தனர். அதேவேளையில் பெரும் மக்கள் திரள் போலீஸ் ஸ்டேசன் முன்னால் கூடியிருந்தது. காங்கிரஸின் ரகசிய திட்டம்தான் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நிகழ்வு என டெல்லி இமாம் குற்றஞ்சாட்டினார்.


பின்னர் டெல்லி இமாம் தலைமையில் ஜங்புராவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக புறப்பட்டபொழுது போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து நடந்த மோதலில் ஒரு டி.டி.ஏ வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டது. மஸ்ஜித் இடிக்கப்பட்ட சம்பவம் துயரமானது என சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் தெரிவித்தார். மஸ்ஜித் புனர் நிர்மாணிக்க முஸ்லிம்களுடன் போராடுவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment